

லால்குடி:
திருச்சியில் இருந்து லால்குடியை நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்றது. பஸ்சை அரியலூரை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டினார். பஸ்சில் சுமார் 25 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் காலை 8 மணி அளவில் லால்குடி அருகே உள்ள வாளாடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது லால்குடியில் இருந்து திருச்சியை நோக்கி வந்த தனியார் கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அரசு பஸ் நிலை தடுமாறி அருகில் இருந்து அரசு பள்ளி சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் கண்ணன், பஸ் பயணி லதா மற்றும் அவரது மகன் ஜெயசூர்யா, கல்லூரி பஸ்சில் இருந்த மாணவி ஜெனிபர் மேரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் லால்குடி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாளாடி ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் லால்குடி பகுதியில் செல்லும் பல தனியார் பஸ்கள் அதிக வேகத்தில் செல்கின்றது. இதனால் விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.