

திண்டுக்கல்:
பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் அன்புமணி ராமதாசுக்கு ஆதரவு பெருகி வருகிறது. மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒரே தலைவராக அவரை மக்கள் பார்க்க தொடங்கி விட்டனர்.
தமிழகம் பல ஆண்டுகளாக நதிநீர் பிரச்சனையில் தனது உரிமையை இழந்து வருகிறது. பவானி ஆற்றில் கேரள அரசு 2 அணைகளை கட்டி தற்போது 3-வது அணையை கட்டும் பணியை தொடங்கி விட்டது. இதன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரிய வறட்சியை சந்திக்கும் நிலை உள்ளது.
இதனை தட்டிகேட்க வேண்டிய தமிழக அரசு தூங்கி வருகிறது. நதிநீர் பிரச்சனையில் சட்ட ரீதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். ஏனெனில் மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் மட்டுமே இழைத்து வருகிறது.
காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு, பவானி ஆறு ஆகிய பிரச்சனைகளில் தமிழக அரசுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இனிமேலும் செய்யாது.
கூட்டுறவு தேர்தல் என்றாலே மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே. ஆனால் தற்போது அதன் நோக்கமே சிதறி போய் விட்டது. கூட்டுறவு தேர்தலில் ஜனநாயக படுகொலை நடக்கிறது. எதிர்கட்சியினர் வெற்றி பெற கூடாது என்ற ஒரே நோக்கத்தில் ஆளும் கட்சியினர் செயல்படுகின்றனர்.
தமிழகக்தில் கடந்த முறை நடந்த கூட்டுறவு சங்க தேர்தலை பா.ம.க. புறக்கணித்தது. ஆனால் இந்த முறை கூட்டுறவு சங்க தேர்தலில் கலந்து கொள்ளும் தமிழக அரசு நியாயமான முறையில் கூட்டுறவு தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews