மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஊழல் வழக்கில் கைது

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை அந்நாட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று கைது செய்தனர். #NajibRazak #NajibRazakarrested
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஊழல் வழக்கில் கைது
Published on

கோலாலம்பூர்:

மலேசியாவின் 14வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

முன்னதாக, மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு மலேசியா நாட்டின் குடியுரிமைத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை அந்நாட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று கைது செய்தனர்.

புட்ரஜயா பகுதியில் உள்ள ஊழல் தடுப்பு தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.13 மணிக்கு நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டதாகவும், நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #NajibRazak #NajibRazakarrested 

X

Maalai Malar
www.maalaimalar.com