

எட்டயபுரம்:
எட்டயபுரம் பஜாரில் அரசு மருத்துவமனை எதிரே ஒரு நகை கடை உள்ளது. எட்டயபுரத்தை சேர்ந்த சங்கரநாராயனன் என்பவர் இந்த நகைகடையை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்கள் நகைகடையின் பூட்டை உடைத்து கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு நகைகள் வைக்கப்பட்டிருந்த ரேக்குகள் இருந்த டிராயர் பூட்டையும் உடைத்து அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்தனர்.
மொத்தம் 60 பவுன் நகைகள் கொள்ளை போயின. இதன் மதிப்பு ரூ.12 லட்சம். பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ.25 ஆயிரத்தையும் எடுத்து சென்றனர். இன்று காலை அந்த வழியே சென்றவர்கள் நகைகடை திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இதுபற்றி எட்டயபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தார்கள்.
கொள்ளை நடந்த கடையில் மற்றும் சுற்ருப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? அதில் காட்சிகள் ஏதும் பதிவாகி இருக்கிறதா என்றும் விசாரணை நடைபெறுகிறது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சங்கரநாராயனன் எட்டயபுரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை நடந்தது எப்படி? கொள்ளையர்கள் வேறு ஏதும் தடயங்களை விட்டு சென்றுள்ளனரா? ஏற்கனவே மற்ற இடங்களில் நகைகடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கும்பல் கைவரிசை காட்டியதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் எட்டயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews