

சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரையில் உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேரு பூங்கா வரையில் சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. பொதுமக்களின் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவு படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை வழியாக அண்ணா சாலைக்கு மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. கூவம் ஆற்றின் குறுக்கே சுமார் 100 அடி ஆழத்தில் இந்த வழித்தட பாதை செல்கிறது.
இதற்காக சென்ட்ரல் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாய், மற்றும் கூவம் ஆற்றின் அடியில் சுமார் 1000 அடி தூரத்துக்கு இரட்டை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ‘அப்கான்ஸ்’ நிறுவனம் மிக திறமையாக வெற்றிகரமாக அமைத்துள்ளது.
இதுகுறித்து ‘அப்கான்ஸ்’ நிறுவன அதிகாரி கூறியதாவது:-
வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை, அண்ணா சாலை வழியாக விமான நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் சுரங்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் சென்ட்ரலில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை செல்லும் வழித்தட பாதையில் கூவம் ஆறு பக்கிங்காம் கால்வாய் குறுக்கீடு உள்ளது.
இந்த ஆற்றின் அடியில் 100 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் மிகவும் சவாலாக இருந்தது. சகதி மண் அடியில் மிகவும் கடினமான பாறைகள் இருந்தது. பாறைகளை ராட்சத எந்திரம் மூலம் உடைத்து இரட்டை சுரங்கம் அமைத்துள்ளோம். ஊழியர்கள் மிகவும் திறமையாக பணிகளை செய்தனர். இதனால் வெற்றிகரமாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.