

சென்னை:
எடப்பாடி பழனிசாமி அணியினரும், டி.டி.வி. தினகரன் அணியினரும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே தர வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் முறையிட்டு உள்ளனர். இதன்மீதான விசாரணை தேர்தல் கமிஷனில் இன்று மதியம் 3 மணிக்கு நடை பெறுகிறது.
எடப்பாடி- ஓ.பி.எஸ். அணி சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம், மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதற்காக நேற்றே டெல்லி சென்று விட்டனர்.
டி.டி.வி. தினகரன் அணி சார்பில் 10 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன், கதிர்காமு, பார்த்தீபன், நத்தினசபாபதி, கலைச்செல்வன், ரங்கசாமி, பாலசுப்பிரமணி, ஜெயந்தி ஆகிய 10 எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்றுள்ளனர்.
எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், நவநீத கிருஷ்ணன், செங்குட்டுவன், நாகராஜ், உதயகுமார் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர். இதுகுறித்து தங்கதமிழ்ச் செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர் ஓ.பன்னீர்செல்வம். அவரிடம் 11 எம்.எல்.ஏ.க்கள் தான் இருந்தனர். இப்போது அ.தி.மு.க. அணியில் இணைந்துள்ளார். இந்த பொதுச்செயலாளர் சசிகலா-துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் என்று 8 லட்சம் பிரமாணபத்திரங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளோம். எனவே நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என இன்று நடைபெறும் விசாரணையில் வாதாடுவோம். எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.