தியாகராய நகரில் தரமற்ற அசைவ உணவு; ஓட்டலுக்கு 'சீல்' - ஐ.டி. ஊழியர்கள் புகாரால் அதிகாரிகள் அதிரடி

அப்போது குழம்புக்குள் பாலித்தீன் கவர் கிடந்ததை பார்த்தனர். வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பினார்கள்.
தியாகராய நகரில் தரமற்ற அசைவ உணவு; ஓட்டலுக்கு 'சீல்' - ஐ.டி. ஊழியர்கள் புகாரால் அதிகாரிகள் அதிரடி
Published on

சென்னை:

தியாகராய நகரில் ஒரு அசைவ உணவகம் உள்ளது. பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவை சாப்பிட இந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வருவார்கள்.

நேற்று பகலில் ஐ.டி. ஊழியர்கள் 15 பேர் மதிய உணவு சாப்பிட சென்றனர். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.

சிறிது சாப்பிட்டதுமே உணவு சரியில்லை என்று தெரிய வந்தது. உடனே ஓட்டல் ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் ஊழியர்கள் தரப்பில் உணவு தரமானதாகத்தான் உள்ளது. முழுவதுமாக சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெண் ஊழியர்கள் சிலர் உணவு கெட்டு போனது போல் தெரிகிறது. வாந்தி வருவது போல் உள்ளது என்று சத்தம் போட்டதால் ஓட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இது பற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளார்கள். உடனடியாக அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார்கள். வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பினார்கள்.

இதையடுத்து ஓட்டல் உரிமையாளரை வர வழைத்து அவர் முன்னிலையில் சமையல் கூடத்தில் சமைத்து வைத்திருந்த உணவுகளை ஆய்வு செய்தார்கள். அப்போது குழம்புக்குள் பாலித்தீன் கவர் கிடந்ததை பார்த்தனர். குளிர்பதன பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த இறைச்சியும் கெட்டுப்போய் இருந்தது. மேலும் அதற்குள் கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.

அவற்றை பார்வையிட்ட அதிகாரிகள் இந்த உணவை நீங்கள் சாப்பிடுவீர்களா என்று கடை ஊழியர்களிடம் கோபத்தில் கேட்டனர். அதை தொடர்ந்து கெட்டுப்போன உணவுகளை எடுத்து சென்று அழித்தனர். மேலும் தற்காலிகமாக அந்த ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர். தரமற்ற உணவுகள் பற்றி விளக்கம் அளிக்கும் படி ஓட்டல் உரிமையாளருக்கு நோட்டீசும் கொடுக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com