

வடமதுரை:
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள், சார்பதிவாளர், வருவாய்த்துறை அலுவலகங்களில் அனைத்து ஆவணங்களும் தமிழில் மட்டுமே பராமரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு அலுவலகங்களுக்கு புகார் தெரிவிக்க வருபவர்கள் தமிழில் மட்டுமே புகார் அளிக்க வேண்டும். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பராமரிக்கப்படும் ஆவணங்களின் தன்மை ஆகியவற்றையும் தமிழ்வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு வந்த தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களின் நிலை குறித்து ஆய்வு செய்தனர். ஆவணங்கள் அனைத்தும் தமிழில் உள்ளதா? புகார்கள் தமிழில் பெறப்படுகிறதா என்றும் சோதனை நடத்தினர்.
இதேபோல அனைத்து அலுவலகங்கள் மற்றும் போலீஸ் நிலையங்களில் திடீர் சோதனை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.