

சசிகலா, தினமும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். இந்த ஆடியோ பதிவுகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.
அந்தவகையில் தூத்துக்குடியை சேர்ந்த ரூபம் வேலவன் என்ற தொண்டரிடம் சசிகலா பேசியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
சசிகலா:- தற்போது கொரோனா காலம் என்பதால், உங்களது பகுதிகளிலேயே ஏதாவது பூஜை செய்யுங்கள், ஏழை மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி உதவுங்கள். எனக்காக மட்டுமல்ல, அனைத்து மக்களுக்காகவும் கடவுளை வேண்டுங்கள். அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியாக அமையும்.
இப்போதுள்ள சூழலில் ஊரடங்கை மதிக்கவேண்டும். கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் வாழ்க்கை நல்ல நிலைக்கு வரவேண்டும். அதுதான் எனக்கு முக்கியம். கொரோனா பாதிப்பு குறைந்ததும் தொண்டர்களை சந்திக்க வருவேன். அ.தி.மு.க.வின் 3-ம் தலைமுறை தலைவராக நான் வரவேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். தொண்டர்களின் சந்தோஷமே என் சந்தோஷம்.
இவ்வாறு அந்த உரையாடலில் சசிகலா பேசியுள்ளார்.