500 ரூபாய்க்கு இதை வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்- அதிரடி சலுகை

அசைவ விற்பனையை அதிகரிக்க வியாபாரிகள் பல்வேறு சலுகைகளை அறிவிக்க தொடங்கி உள்ளனர்.
பெட்ரோல்
பெட்ரோல்
Published on

ஆடி மாதத்தில் கோவில் விழாக்கள் அதிகம் நடைபெறுவது வழக்கம். இதனால் இந்த மாதத்தில் இறைச்சி விற்பனை பெரிதாக இருக்காது. இதனால் மீன், ஆடு, கோழி கறிகள் விற்பனை மந்தமாகவே இருக்கும்.

வியாபாரிகள் இந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் கடைகளை கூட திறப்பதில்லை.

இந்த நிலையில் அசைவ விற்பனையை அதிகரிக்க வியாபாரிகள் பல்வேறு சலுகைகளை அறிவிக்க தொடங்கி உள்ளனர். இதில் மதுரை மாவட்ட வியாபாரி ஒருவர் 500 ரூபாய்க்கு மேல் மீன் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் தான் இந்த அறிவிப்பு வெளியானது.

இதுபற்றி கடையின் முன்பு விளம்பர போர்டு வைக்கப்பட்டு இருந்தது. அதில் “வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை பின்பற்றி 500 ரூபாய்க்கு மேல் மீன் வாங்கினால் அவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும். இந்த சலுகை ஒரு நாள் மட்டுமே” என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பை கண்ட பலரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

500 ரூபாய்க்கு மேல் மீன் வாங்கியவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் பெறுவதற்கான கூப்பன் வழங்கப்பட்டது.

இன்று பெட்ரோல் லிட்டர் ரூ.103-க்கு மேல் விற்கப்படும் நிலையில் இலவசமாக மீன்கடையில் பெட்ரோலுக்கு டோக்கன் வழங்குவதை அறிந்து ஏராளமானோர் போட்டி போட்டு மீன்களை 500 ரூபாய்க்கு மேல் வாங்கி சென்றனர்.

ஜவுளி கடைகளில்தான் ஆடி தள்ளுபடி உண்டோ? நாங்களும் கொடுப்போம் என மீன் வியாபாரியும் புதிய சலுகையை அறிவித்து விற்பனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நபர் அதிக தொகைக்கு மீன் வாங்கி எண்ணற்ற பெட்ரோல் கூப்பனை பெற்று காண்பித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com