

இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் மோதிக் கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்திற்குப் பிறகு பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இருந்தாலும் சீனா அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவும் ராணுவம், பொருளாதாரம் என இரு வடிவிலும் பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது லடாக் எல்லையில் மோசமான நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கிச் செல்லும் வழி என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்ஷ் ஷ்ரிங்லா கூறுகையில் ‘‘40 ஆண்டுகளில் நாம் இதுபோன்று அதிக உயிர்களை இழக்கவில்லை என்பதன் காரணமாக நெருக்கடியின் அளவு மிகப்பெரியது. நாம் டிப்ளோமேட்டிக் மற்றும் ராணுவ அளவில் ஈடுபட்டுள்ளோம். பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கிச் செல்லும் வழி. ஆனால் நமது இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியோடு உள்ளோம்.
இந்தியா - சீனா இடையிலான சூழ்நிலை இதுவரை இல்லாதது. சீனா தனது ஒருதலைபட்சமான நிலையை புரிந்து கொள்ளாத வரையில் அவர்களுடன் வழக்கமான தொடர்பில் இருக்க முடியாது’’ என்றார்.