

கொழும்பு:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. அத்துடன், 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடந்த 4 போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கொழும்புவில் தொடங்கியது. மழை குறுக்கிட்டதால் டாஸ் போட தாமதம் ஏற்பட்டது. டாசில் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும் திரிமன்னே -மேதுயூஸ் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
இந்நிலையில், இலங்கை அணியின் தனஞ்செயாவை விக்கெட் கீப்பர் தோனி ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார். இது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவரது நூறாவது ஸ்டம்பிங் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இலங்கை விக்கெட் கீப்பர் சங்ககராவின் உலக சாதனையை தோனி முறியடித்துள்ளார். அவரது புதிய சாதனைக்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.