

திருத்தணி:
திருத்தணி நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம், 50 பேரை ஒப்பந்தம் அடிப்படையில் நியமித்து, 21 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தலைமையில், துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து, மேற்பார்வையாளர் கார்த்திக் உள்பட 7 பேர் கொண்ட குழுவினரும் சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு இரண்டு வார்டு வீதம் நேரில் சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஆணையர் தலைமையிலான குழுவினர் திருத்தணி ரெயில் நிலையம் சென்றனர். அங்கு டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது ரெயில் நிலையத்தில், முதல் நடைமேடையில் நிலைய அதிகாரி அறைக்கு முன் வைத்திருந்த தீயணைப்பு வாளியில், டெங்கு கொசு புழு வளர்ந்துள்ளதை கண்டுபிடித்து அழித்தனர்.
இதையடுத்து ஆணையர் ராஜலட்சுமி திருத்தணி ரெயில் நிலையத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். இதே போல் டெங்கு கொசு புழு இருக்கும் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.