டெல்லியில் தொடர்ந்து கைவரிசை காட்டிய ஸ்பைடர்மேன் திருடன் கைது

டெல்லியில் வீடுகளில் வினோதமான முறையில் திருடி வந்த ஸ்பைடர்மேன் திருடன் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். #SpidemanThiefArrested
டெல்லியில் தொடர்ந்து கைவரிசை காட்டிய ஸ்பைடர்மேன் திருடன் கைது
Published on

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள திலக் நகர் பகுதியைச் சேர்ந்தவன் ரவி (23). இவன் வீடுகளில் திருடுவதில் வழக்கமான முறையைப் பயன்படுத்தியுள்ளான். குறிப்பாக வீட்டின் முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் மட்டும் தொடர்ந்து திருடி வந்துள்ளான். இந்த வீடுகளின் திறந்த வராண்டா அல்லது பால்கனிகளை பயன்படுத்தி வீடுகளில் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளான்.

இந்நிலையில் டெல்லியில் சமீப காலமாக பல்வேறு இடங்களிலும் நகை, பணம் திருடுபோவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து போலீசார் ஒரு குழுவாக செயல்பட்டு, இந்த வினோத திருடனை கைது செய்துள்ளனர்.

இது குறித்து டிஜிபி மோனிகா பரத்வாஜ் கூறுகையில், ‘நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்ட காவல்நிலையங்களுக்கு நாங்கள் விரைந்தோம். அங்கு இருந்த குற்றவாளிகள் பட்டியலையும், புகார்கள் குறித்த தகவல்களையும் விசாரித்தோம். இதில் அனைத்து இடங்களிலும் ஒரே பாணியில் திருடப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து திருடனை தேடுகையில், நேற்று சுபாஷ் நகரில் உள்ள பசிபிக் மாலில் கைது செய்தோம்’ என கூறினார்.

போலீசார் ரவியிடம் நடத்திய விசாரணையில், அவன் வீட்டின் பால்கனியில் ஏறி அறைக்குள் செல்ல வடிகால் குழாய்களை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதனால் அவனை ‘ஸ்பைடர்மேன் திருடன்’ என அழைக்கின்றனர். மேலும் கீர்த்தி நகரில் பதிவு செய்யப்பட்ட 7 திருட்டு வழக்குகளில், 6 வழக்குகளில் ரவி சம்பந்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #SpidemanThiefArrested

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com