பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய கீதாவுக்கு குவியும் திருமண வரன்கள்

பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய கீதாவுக்கு திருமண வரன்கள் குவிந்து வருகின்றன என அவரது பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய கீதாவுக்கு குவியும் திருமண வரன்கள்
Published on

இந்தூர்:

இந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற பேசமுடியாத, காது கேளாத பெண்ணான கீதாவை 15 வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானைச் சேர்ந்த எதி அறக்கட்டளை ஆதரவளித்து பாதுகாத்து வந்தது. இதையடுத்து, கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி அவர் இந்தியா திரும்பினார்.

மத்தியப்பிரதேசம் மாநில தலைநகரான இந்தூரில் உள்ள பேசமுடியாத, காது கேளாத சிறுமியருக்கான காப்பகத்தில் கீதா தங்கவைக்கப்பட்டார்.

இதற்கிடையே, நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக மத்தியப்பிரதேசம் மாநில தலைநகரான இந்தூருக்கு வந்திருந்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்தூரில் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு கீதாவை வரவழைத்து சந்தித்து பேசினார்.

இதேபோல், பிரதமர் மோடியும் கீதாவை டெல்லிக்கு வரவழைத்து ஆசிர்வதித்தார். தொடர்ந்து அவர் இந்தூரில் தங்கி வருகிறார்.

கீதாவின் பாதுகாவலர் ஞானேந்திரா புரோகித் கடந்த சில தினங்களுக்கு முன் அவரது பேஸ்புக்கில், கீதாவுக்கு திருமணம் செய்ய உள்ளதாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய கீதாவுக்கு திருமண வரன்கள் குவிந்து வருகின்றன என அவரது பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புரோகித் கூறுகையில், கீதாவை திருமணம் செய்வதற்காக சுமார் 20 பேர் வரை தங்களை பற்றிய விவரங்களை அனுப்பியுள்ளனர். இதில் 12 பேர் மாற்று திறனாளிகள், ஒரு பூசாரி, ஒரு எழுத்தாளரும் அடங்குவர். வரன்களை தேர்வு செய்வது குறித்து கீதா முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com