

மதுரை:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் தோப்பூர், உச்சப்பட்டி பகுதிகளில் 587 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதற்காக கடந்த 1989-ம் ஆண்டு செண்டுக்கு 99 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து நில உரிமையாளர்கள் சார்பில் வக்கீல் பாஸ்கரன், புனித வள்ளி ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு உச்சப்பட்டியில் செண்டுக்கு ரூ.1,700-ம், தோப்பூரில் செண்டுக்கு ரூ2,500-ம் இழப்பீடு வழங்க கடந்த 1998-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் மாவட்ட நிர்வாகம் இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. இதனால் நில உரிமையாளர்கள் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
இந்த வழக்கில் இழப்பீட்டுத்தொகை வழங்காததால் மதுரை மாவட்ட கலெக்டர் காரை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு நகலுடன் இன்று காலை கோர்ட்டு அமீனாக்கள் சீனிவாசன், மகாமுனி, இளங்கோ, சீதா ஆகியோர் மதுரை மாவட்ட கலெக்டர் ஆபீஸ் வந்தனர். அவர்கள் கோர்ட்டு உத்தரவு நகலை கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் காண்பித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.