

திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே பாடியூர் புதுப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு இன்று தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று தேர்தல் நடந்தது. மொத்தம் 40 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் 20 பேர் மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மேலும் பி.புதுப்பட்டி ஏ.1626 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் என்பதற்கு பதிலாக 1226 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் என அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது. இதில்பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளதாக கூறி இருதரப்பினர் வாக்குப்பதிவு நடந்த மையத்துக்குள் திடீர் என புகுந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் 2 தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அப்போது அங்கிருந்த வாக்குபெட்டிகள் சூறையாடப்பட்டது. அதோடு வாக்கு சீட்டுகள் கிழிக்கப்பட்டது. அங்கிருந்த மேஜை- நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரத்தில் வன்முறை ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். வாக்குபதிவு மையத்தில் நின்று இருந்தவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் அதிகாரிகள் அங்கு வந்து தேர்தலை நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். அங்கு பதட்டம் நிலவுவதால் போலீஸ் படை குவிக்கப்பட்டு உள்ளது. #CooperativeSocietiesElection