ஏர்வாடி அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

ஏர்வாடி அருகே காதல் திருமணத்திற்கு உதவிய கல்லூரி மாணவரை பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

களக்காடு:

ஏர்வாடி அருகே உள்ள எல்.என்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் மதன். இவரும், அதே ஊரைச் சேர்ந்த சுதா என்பவரும் கடந்த 1 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு மதனின் சித்தப்பா செல்வகுமாரின் மகன் அருண்குமார் (வயது 19) உதவி செய்துள்ளார். இதனால் சுதாவின் உறவினரான அதே ஊரைச் சேர்ந்த இசக்கிவேல் மகன் ராமச்சந்திரனுக்கு அருண்குமார் மீது விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவில் அருண்குமார் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ராமச்சந்திரன், அவரது உறவினர்கள் பெருமாள் மகன்கள் இசக்கிதாசன், பாலகிருஷ்ணன், மாயாண்டி ஆகிய 4 பேர் சேர்ந்து அருண்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த அருண்குமார் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். 

போலீசார் இதுதொடர்பாக ராமச்சந்திரன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். தாக்கப்பட்ட அருண்குமார் பணகுடி கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com