திருவாரூர் விடுதியில் தூக்குப்போட்டு கல்லூரி பேராசிரியர் தற்கொலை

திருவாரூரில் விடுதியில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபிகிருஷ்ணன்
கோபிகிருஷ்ணன்
Published on

நாகை மாவட்டம் திருக்குவளையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வந்தவர் கோபிகிருஷ்ணன் (வயது 36). இவருடைய சொந்த ஊர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி விடுமுறையில் இருந்த கோபிகிருஷ்ணனை கடந்த 5-ந்தேதி கல்லூரிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து அவர் 4-ந்தேதியன்று பண்ருட்டியில் இருந்து புறபட்டு திருவாரூருக்கு வந்து விடுதியில் தங்கியுள்ளார். இந்தநிலையில் அவர் தங்கும் அறையில் நேற்று துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து விடுதி உரிமையாளர் திருவாரூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மின் விசிறியில் தூக்குப்போட்டு கோபிகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேராசிரியரின் தற்கொலை குறித்து விடுதியில் தங்கி இருப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விடுதியில் தங்கி இருந்த மற்றொருவர் கடந்த சில மாதங்கள் முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com