

திருச்சி:
சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் யானைகள் மறுவாழ்வு மையம் மற்றும் காப்பகம் உள்ளது. இங்கு 6 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் திருப்பரங்குன்றம் கோவிலில் பாகனை சுவற்றில் அடித்துக்கொன்ற தெய்வானை என்ற யானையும் ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தன்னை பராமரித்து வந்த பாகன் சரண் (வயது 22) என்பவரை தும்பிக்கையால் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த சரணுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் லால்குடி, புள்ளம்பாடி பகுதிகளில் நேற்று கொரோனா தடுப்பு பணிகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர் எஸ்.சிவராசு திடீர் என இந்த யானைகள் காப்பகத்துக்கு சென்றார். அங்கு யானைகளை பார்வையிட்ட அவர், யானைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், வழங்கப்படும் உணவு வகைகள் பற்றி வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டார். மேலும் அவற்றை நன்றாக பராமரிக்கும் படி உத்தரவிட்டார்.