குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்த மாணவர் கைது

குளச்சல் அருகே பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்த மாணவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

குளச்சல்:

நாடு முழுவதும் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

தமிழகத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சைபர் கிரைம் போலீசாரின் துணையோடு குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வோரை கண்காணித்து வந்தனர். இது தொடர்பாக குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குளச்சல் அருகே பெத்தேல்புரம், கொடுமுட்டி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வாலிபர் பதிவிறக்கம் செய்த குழந்தைகளின் ஆபாச படங்களை செல்போன் மூலம் போலி பேஸ்புக் முகவரி தொடங்கி அதில் பரவ விட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க குளச்சல் போலீசில் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து சமூக ஊடகங்களில் பரப்பியது பிபின் சுந்தர்ராஜ் (வயது 19) என கண்டுபிடிக்கப்பட்டது. இவர் பாலிடெக்னிக் மாணவர் ஆவார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 67 ஏ, 67 பி, தகவல் தொழில் நுட்ப சட்டம் 14(1) மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com