கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளியின் தூக்குத் தண்டனை நிறுத்திவைப்பு

கோவையில் சிறுமி மற்றும் அவளது சகோதரனை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளியான மனோகரனுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி மனோகரன்
குற்றவாளி மனோகரன்
Published on

சென்னை:

கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு 11 வயது சிறுமி முஸ்கின், அவரது தம்பி ரித்திக் ஆகியோர் கால்டாக்சியில் பள்ளிக்கு சென்றபோது கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ், அவனது கூட்டாளி மனோகரன் இருவரும் திட்டம் போட்டு சிறுமி முஸ்கின், சிறுவன் ரித்திக் இருவரையும் கடத்திச் சென்று கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் டிரைவர் மோகன் ராஜ், போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியபோது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது கூட்டாளி மனோகரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டான். இவ்வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம், குற்றவாளி மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை மற்றும் 3 ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்த நிலையில், அவனை டிசம்பர் 2-ம் தேதி தூக்கிலிட கோவை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, ஆளுநருக்கு கருணை மனு அனுப்ப மனோகரனுக்கு அவகாசம் வழங்காமல் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்திருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனோகரனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் மனோகரன் தாக்கல் செய்த மனுவுக்கு 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com