முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - கோவை, திருப்பூரில் கடைகள் அடைப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - கோவை, திருப்பூரில் கடைகள் அடைப்பு
Published on

திருப்பூர்:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருப்பூர் - தாராபுரம் ரோடு, திருப்பூர் - அவினாசி ரோடு, பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. டீக்கடை, பேக்கரி கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் பின்னலாடை நிறுவனங்களும் இன்று விடுமுறை விடப்பட்டது. இதனால் எப்போதும் தொழிலாளர்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும் பகுதிகள் வெறிச்சோடியது. தொழிலாளர்கள் விடுமுறை காரணமாக குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டது. அதில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

பல்லடத்தில் என்.ஜி.ஆர். சாலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருப்பூரில் பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட்டுகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் வாஜ்பாய் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி இன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர், கவுண்டம்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளையம், துடியலூர், ஆலாந்துறை, மாதம்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

சூலூர் உள்ளிட்ட சில இடங்களில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள், ஆவின் பூத்கள் வழக்கம்போல திறந்திருந்தன.

மாநகரில் சிங்காநல்லூர், காந்திபுரம், ரத்தினபுரி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட சில இடங்களில் கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கபட்டு இருந்தன. ஒரு சில பேக்கரிகள் அடைக்கப்பட்டு இருந்தது.

கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின. ஆட்டோக்கள் வழக்கம்போல ஓடின. இதனால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com