மயிலாடுதுறை துலாகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புனித நீராடினார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி புஷ்கர விழாவில் கலந்து கொண்டு புனித நீராடினார்.
காவிரி துலாகட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புனித நீராடியபோது எடுத்த படம்.
காவிரி துலாகட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புனித நீராடியபோது எடுத்த படம்.
Published on

நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாகட்டத்தில் 144 ஆண்டுகளுக்கு பிறகு குருபெயர்ச்சியையொட்டி நடைபெறும் காவிரி மகாபுஷ்கர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழா வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது. இதில் கலந்து கொண்டு புனித நீராடினால் புண்ணியம் சேரும் என்று கூறப்படுகிறது. மேலும் மகாளய அமாவாசையையொட்டி இங்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்தது என்பதால் விழாவையொட்டி நேற்று வரை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி புஷ்கர விழாவில் கலந்து கொண்டு புனித நீராடினார். அவருடன் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் காமராஜ், வேலுமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன், ஓ.எஸ்.மணியன், சம்பத், எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன் பவுன்ராஜ், பாரதி உள்பட பலர் கலந்து கொண்டு நீராடினர். பின்னர் காவிரி புஷ்கர விழா சிறப்புமலர் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் நூலை வெளியிட அதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்று கொண்டார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூலு, தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் ஆகியோர் தலைமையில் 1250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


முன்னதாக முதல்வருக்கு நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடம் பாலம் அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகை மாவட்ட அ.தி.மு.க சார்பில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் முதல்வருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கலெக்டர் சுரேஷ்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பாரதிமோகன் எம்.பி., எம்.எல்.ஏ பாரதி, ஆகியோர் சால்வை அணிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com