

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வாரம் ‘சாவன்’ என்ற இந்துக்களின் புனித மாதம் பிறக்கிறது. இதையொட்டி முதல்- மந்திரி யோகி ஆதித்ய நாத் “ கன்வாரியா யாத்ரா” என்ற பெயரில் புனித யாத்திரை மேற்கொள்கிறார்.
குறிப்பாக கடந்த காலங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள மீரட், ஹபுர், காசியாபாத், பாக்பட், முகாபர் நகர், ஷாம்லி, சஹரன்பூர் மாவட்டங்களில் யாத்திரை மேற்கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தையொட்டி முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் மாவட்ட கலெக்டர்களுக்கு பல அதிரடி உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.
தான் சுற்று பயணம் செய்யும் மாவட்டங்களில் சாலைகளில் மூலிகை தன்மையையும் அடர்த்தி யாகவும் வளரக் கூடிய மரங்களை நட வேண்டும். மேலும் ஆபாச வார்த்தைகளுடன் கூடிய பாடல்களையோ, சினிமா பாடல்களையோ ஒலிபரப்பக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
சாவன் புனித மாதத்தில் சிவ பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து வந்து நடைபயணமாக சென்று கோவில்களில் அபிஷேகம் செய்வார்கள்.
மேலும் முதல்-மந்திரியின் உத்தரவையடுத்து மாநில வனத்துறை அதிகாரிகள் 27 வகையான மூலிகை மரக்கன்றுகளை நட ஏற்பாடு செய்துள்ளனர். எந்த வகையான மரங்களை நடவேண்டும் என்பது தொடர்பாக ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் மற்றும் சமஸ்கிருத கல்லூரி முதல்வர் ஆச்சார்யா சிந்தாமணி ஜோஷி ஆகியோர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.