

சென்னை:
சென்னை மாநகராட்சி சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (28-ந்தேதி) நடை பெறுகிறது.
சென்னையில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 7.06 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1640 சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து முறையாக கொடுத்திருந்தாலும் நாளை நடைபெறும் முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாமில் அவசியம் சொட்டுமருந்து குழந்தைகளுக்கு போட்டுக் கொள்ள வேண்டும்.
முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் வழக்கமான தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் மாற்று மருந்து அல்ல. இது ஒரு கூடுதல் தவணையாகும்.
சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
2-வது கட்டமாக மார்ச் மாதம் 11-ந்தேதி சொட்டு வழங்கப்படுகிறது.
தெற்கு ரெயில்வேயில் உள்ள 6 கோட்டங்களிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்த முகாம் சென்னை சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களிலும் பிற மாவட்டங்களில் உள்ள ரெயில் நிலையங்களிலும், ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்புகளிலும் நடக்கிறது. 190 இடங்களில் நடத்தப்படும் முகாமில் ரெயில் பயணிகள், ரெயில்வே தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போடப்படும்.
ரெயில்வே மருத்துவ மனைகள், ரெயில்வே சுகாதார மையங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இதுதவிர ரெயில்களில் நடமாடும் மருத்துவ குழுக்களும் செயல்கின்றன. அவர்கள் ரெயிலில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு சொட்ட மருந்து வழங்குவார்கள். இந்த சொட்டு மருந்து முகாம் முக்கிய ரெயில் நிலையங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.