பெண்கள் கல்வி கற்க வயது தடையாக இருக்காது: பட்டம் பெற்ற செல்லத்தாய் பேட்டி

பெண்கள் கல்வி கற்க வயது தடையாக இருக்காது என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 67 வயது மாணவி செல்லத்தாய் கூறினார்.
பெண்கள் கல்வி கற்க வயது தடையாக இருக்காது: பட்டம் பெற்ற செல்லத்தாய் பேட்டி
Published on

சென்னை:

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 67 வயது மாணவி செல்லத்தாயும் பட்டம் பெற்றவர். அவர் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் சாத்தூர். நான் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து இருந்தேன். பின்னர் எனக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசை. அதற்காக எனது தந்தைக்கு தெரியாமல் சென்னை ராணி மேரி கல்லூரியில் விண்ணப்ப படிவத்தை வாங்கி வீட்டில் வைத்திருந்தேன். அந்த காலத்தில் பெண்குழந்தைகளை அதிகம் படிக்க வைக்க மாட்டார்கள். இதன் காரணமாக எனது தந்தை அந்த விண்ணப்ப படிவத்தை கிழித்து போட்டுவிட்டார்.

என்னுடைய கணவர் பெயர் பவுன்ராஜ். அவருக்கு கடம்பூர். நான் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்துவருகிறேன். நான் சிவில் சப்ளைஸ் கார்பரேசனில் கண்காணிப்பாளராக பணியாற்றி 30-6-2009 அன்று ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஆங்கிலம்) படித்து பட்டம் பெற்றேன். அதன் பின்னர் இப்போது எம்.ஏ.(வரலாறு) பட்டம் பெற்றேன்.

இனி சட்டம் படிப்பேன். படிப்பதற்கு வயது ஒரு காரணமாக இருக்கக்கூடாது. பொதுவாக பெண்கள் படிக்க வேண்டும். எனக்கு 3 பெண் குழந்தைகள். அவர்களை படிக்க வைத்தேன். அவர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளார்கள். எனக்கு படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. நான் படித்துக்கொண்டே இருப்பேன். எனக்கு 67 வயது முடிந்து 68 பிறந்துள்ளது.

இவ்வாறு செல்லத்தாய் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com