

தமிழக கோவில்களில் இருந்து சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க விசாரணை அதிகாரியாக பொன் மாணிக்கவேலை சென்னை ஐகோர்ட்டு நியமித்து உள்ளது. இவர் பல்வேறு இடங்களில் இருந்து சிலைகளை பறிமுதல் செய்ததுடன், அதில் தொடர்புடைய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்தநிலையில் தற்போது தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கும் இடையே கடுமையான பிரச்சினை நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதிகாரி பொன் மாணிக்கவேல் மீது போலீஸ் அதிகாரிகள் அடுக்கடுக்காக புகார்கள் அளித்து வருகிறார்கள். குறிப்பாக பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி 13 போலீஸ் அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தனர். அதன்பின் 4 அதிகாரிகள் அவர் மீது புகார் அளித்தனர். இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் பொன் மாணிக்கவேலுக்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.
பொன் மாணிக்கவேல் பொய் வழக்கு போடுவதை கண்டித்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் ஆகியோரிடம் புகார் மனு அளித்து உள்ளனர். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து வந்து பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளனர்.
சென்னை டிஜிபி அலுவலகம்
சிலை கடத்தல் என்று கூறி இதுவரை அறநிலையத்துறையில் பணியாற்றி வந்த 10 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன் மாணிக்கவேலால் இந்து அறநிலையத்துறையே முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பொன் மாணிக்கவேல் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சிலைகடத்தல் தொடர்பான எந்த வழக்கிலும் அவர் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அவர் பதிவு செய்த வழக்குகளில் எந்த உண்மையும் இல்லை. கோவில்களில் உள்ள அறங்காவலர்களே சிலைகளுக்கு பொறுப்பு என்பதை அவர் உணர வேண்டும்.