தடையை மீறி ரெயில் நிலையத்திற்குள் புகுந்து போராட்டம் நடத்திய 230 பேர் மீது வழக்கு

திருப்பூரில் தடையை மீறி ரெயில் நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட 230 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திருப்பூர்:

திருப்பூரில் த.மு.மு.க சார்பில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் தடையை மீறி ரெயில் மறியல் போராட்டம் நடைபெற போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் பத்ரிநாராயணன் நேரடி மேற்பார்வையில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாவட்ட தலைவர் நசுருதீன் தலைமையில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் திரண்ட த.மு.மு.க. வினர் போலீசார் தடுப்பையும் மீறி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்து கோ‌ஷம் போட்டு போராட்டம் நடத்தினர்.

நீண்ட நேரமாக போராடிய போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி கைது செய்தனர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது .இந்த போராட்டம் காரணமாக திருப்பூருக்கு வரும் 3 ரெயில்கள் தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினார்கள். இந்த நிலையில் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் புகுந்து போராட்டம் செய்த 230 த.மு.மு.க.வினர் மீது திருப்பூர் ரெயில்வே போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல திருப்பூர் வடக்கு போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com