

ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு அரசு போக்குவரத்து கழக பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 58 பயணிகள் இருந்தனர். சென்னையில் இருந்து ஓசூருக்கு ஹோண்டா சிட்டி சொகுசு கார் வந்து கொண்டிருந்தது.
நேற்று மாலை 3.45 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி கோனேரிப்பள்ளி அருகே குருபராத்த பள்ளி பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தபோது அதன் டயர் திடீரென்று வெடித்தது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிரே வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த மின் கம்பத்தை உரசியடி சென்று சாலை ஓரத்தில் இருந்த 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் வந்த 5 பேரும், பஸ் கண்டக்டரும் பலியானார்கள். விபத்தில் இறந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. மணீஸ்குமார் (வயது 21) ஓசூர் அப்பாவு நகர்.
2. சஞ்சய்குமார் (17) ஓசூர் அப்பாவு நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவர்.
3. ஆதர்ஷ் (16) ஓசூர் டைட்டான் டவுன்சிப் பகுதியை சேர்ந்த இவர் பிளஸ்-1 மாணவர் ஆவார்.
4) ஆகாஷ் (16) ஓசூரை அடுத்த பேடரபள்ளியை சேர்ந்தவர்.
5) இசக்கியான் (16) ஓசூர் ரெயில்வே ஸ்டேசன் எதிரே உள்ள நேரு நகரை சேர்ந்தவர்.
6) கோவிந்தராஜ் (55) தர்மபுரி மாவட்டம் ஏமக் கொட்டாயூர் பகுதியை சேர்ந்தவர். அரசு பஸ் கண்டக்டர்.
பஸ்சில் இருந்த 27 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர். இதில் 12 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும், 15 பேர் ஓசூர் அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews #buscarcrash