திருப்பதி அருகே ஆட்டோ மீது பஸ் மோதி 11 பேர் படுகாயம்

திருப்பதி அருகே ஆட்டோ மீது தமிழக அரசு பஸ் மோதி 4 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த குர்ரப்பகாரி பல்லியை சேர்ந்தவர் நீலகண்டநாயுடு. இவரது உறவினர்கள் 11 பேர் திருப்பதி அருகே உள்ள அலையார் வேதாத்ரி மகரிஷி ஆசிரமத்திற்கு சென்றனர்.

பின்னர் இன்று அதிகாலை ஆட்டோவில் வீடு திரும்பினர். சந்திரகிரி பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் தொண்டவாரா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது திருப்பதியில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணிகளுடன் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோ உருண்டு சென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த மதுசூதன்நாயுடு, செங்கையா, லோகேஷ், கோபால், சுகுணா, அனிதா, துளசியம்மாள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் காயத்தால் அலறி கூச்சலிட்டனர். அந்த வழியாக வந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரா விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சந்திரகிரி போலீசார் வழக்கு பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com