

லண்டன்:
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து பாராளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது.
அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின், இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்கு உள்ளாக பிரெக்சிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையெனில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.
இதற்கிடையே, பிரெக்சிட் விவகாரத்தில் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் முயற்சியை பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் தோற்கடித்தனர்.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் சகோதரர் ஜோ, மந்திரி சபையில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கடந்த சில வாரங்களாக குடும்ப விசுவாசம் மற்றும் நாட்டு நலனுக்கும் இடையே சிக்கித் தவித்து வந்தேன். இது தீர்க்க முடியாத பிரச்சனை. எனவே, மற்றவர்கள் எனது அமைச்சர் மற்றும் மந்திரி பதவிகளை வகிப்பதற்கான நேரம் என பதிவிட்டுள்ளார்.