நீல திமிங்கல விளையாட்டுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

நீல திமிங்கல விளையாட்டு மற்றும் அதன் இணைப்பை மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வருகிற 15-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
நீல திமிங்கல விளையாட்டுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
Published on

நீல திமிங்கல விளையாட்டு மற்றும் அதன் இணைப்பை மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வருகிற 15-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

நீல திமிங்கலம் என்ற ‘ஆன்லைன்’ விளையாட்டு, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை, தற்கொலைக்கு தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நீல திமிங்கல விளையாட்டை விளையாடுபவர்களில் சிலர், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இந்த விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

மேலும், இந்த விளையாட்டு தொடர்பான தொடர்புகளை உடனடியாக நீக்குமாறு கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக் கிறது.

இந்த நிலையில் நீல திமிங்கல விளையாட்டுக்கு தடை விதிக்க கோரி ஜெயசுகின் என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார்.

அவர் தனது மனுவில் கூறி இருப்பதாவது:-

நீல திமிங்கல விளையாட்டால் இதுவரை இந்தியாவில் 200 பேர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதனை கூகுள், பேஸ்புக் வழியாக பதிவிறக்கம் செய்ய முடியாத வகையில் மத்திய அரசு தற்போது தடை விதித்து உள்ளது. இதனால் இதனை யாரும் புதிதாக இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்ய முடியாது.

ஆனால் எங்கோ ஏற்கனவே விளையாடி கொண்டிருக்கும் யாரோ ஒருவர் தான் இதன் இணைப்பை மற்றவர்களுக்கு அனுப்பி வைக்க முடியும். எனவே இதனை தடை செய்வது குறித்து புதிய உத்தியும் ஆழ்ந்த அக்கறையும் தேவைப்படுகிறது. எனவே, உடனடியாக நீல திமிங்கல விளையாட்டு மற்றும் அதன் இணைப்பை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதை தடுக்கும் உத்திகளை கண்டுபிடித்து, இந்த விளையாட்டுக்கு உடனடியாக தடை விதிக்குமாறு அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

வக்கீல் ஜெயசுகின் நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி, தான் மனு தாக்கல் செய்து இருக்கும் தகவலை கூறி, தனது மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசார ணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com