

லக்னோ:
உ.பி.யின் லக்னோ தொகுதியில் நடந்த ஹோலி விழாவில் பங்கேற்ற உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஹோலி விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் உள்துறை மந்திரியும், லக்னோ தொகுதி எம்பியுமான ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும்.
திரிபுராவில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது. அதுபோல நாகலாந்து மற்றும் மேகாலயாவில் கூட்டணி ஆட்சியில் இடம் பிடித்துள்ளது.
லக்னோவில் மார்ச் 18-ம் தேதி நடைபெற உள்ள ரெயில்வே திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொள்கிறார் என தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா மற்றும் சட்ட மந்திரி பிரிஜேஷ் உள்பட பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.