

புதுடெல்லி:
மத்திய பிரதேச மாநிலம் புர்கான்பூரில் நேற்று மாலை பிரோஸ், சபீர் மன்சூரி ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். பிரோசின் மகனுக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வாங்கிக்கொண்டு வந்தனர். அப்போது சாலையோர கரும்புத் தோட்டத்தில் இருந்து திடீரென வெளியே வந்த சிறுத்தை, அவர்களை நோக்கிப் பாய்ந்தது.
அவர்கள் வேகமாக பைக்கை ஓட்டி உள்ளனர். இருப்பினும் சிறுத்தை அவர்களை விட வேகமாக முன்னேறி இரு சக்கர வாகனத்தை நெருங்கியது. அப்போது, பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த சபீர், கேக் வைத்திருந்த பாக்சை சிறுத்தை மீது வீசி எறிந்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் இவ்வாறு செயல்பட்டதால், சிறுத்தையின் கவனம் சிதறியது. அவர்களை பின்தொடர்வதை நிறுத்திவிட்டு, வயல்வெளிக்குள் திரும்பிப் சென்றது. இதனால் இருவரும் பெரும் ஆபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
சிறுத்தை 500 மீட்டர் தூரம் வரை தங்களைப் பின்தொடர்ந்ததாகவும், மரணத்திலிருந்து தப்பித்ததாகவும் சபீர் கூறி உள்ளார்.
ஆபத்தை உணரும்போது தங்களைக் காப்பாற்றுவதற்கு, முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், அதைத்தான் அவர்கள் செய்திருக்கிறார்கள் என வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.