

திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி எல்லையில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகள் அதிக நாட்கள் தங்கிசெல்வது வழக்கம்.
எனவே இந்த குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் இயற்கை கழகம் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறது.மாவட்ட நிர்வாகமும் பரிந்துரைத்தது.
அதன் பயனாக வனத்துறையின் கூடுதல் முதன்மை வனப்பாதுகாப்பு அதிகாரி அசோக் தீப்பர்வா தலைமையில், மாவட்ட வனச்சரகர்கள், வனக்காவலர்கள் அடங்கிய குழு நஞ்சராயன் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:-
நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்றும் கோரிக்கையை ஆராய சென்னையில் இருந்து வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு திருப்பூர் வந்து ஆய்வு மேற்கொண்டது.
திருப்பூர் இயற்கை கழகத்தின் 20 உறுப்பினர்கள், ‘வனத்துக்குள் திருப்பூர்’ அமைப்பினர், திருப்பூர் அறிவியல் இயக்கத்தினர், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதை கண்டு அசந்துபோன குழுவினர் கட்டாயம் கூடுதல் முயற்சி எடுக்கப்படுமென உறுதி அளித்துள்ளனர் என்றனர்.