தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் ஓடின

திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின.
தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் ஓடின
Published on

திண்டுக்கல்:

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இன்றும் நாளையும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டது.

மத்திய அரசு அலுவலகங்களான பி.எஸ்.என்.எல்., தபால்துறை, ரெயில்வே உள்ளிட்ட அலுவலகங்களில் குறைந்த அளவு ஊழியர்களே வந்திருந்தனர். வங்கிகள் செயல்படவில்லை.

திண்டுக்கல் நகரில் 50-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் அந்த ஆலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் திண்டுக்கல்லில் முழு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அவர்கள் தெரிவிக்கையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்டோக்களுக்கு இலவச ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்படும் என்றார்.

ஆனால் தற்போதைய தமிழக அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. இன்சூரன்ஸ் தொகை அதிக அளவு உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்கான மானியம் வழங்கவில்லை. இதனை கண்டித்து இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற உள்ளோம் என்றனர்.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றபோதும் ஒருசில அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் இல்லாமல் மக்கள் பணி பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com