பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய பெங்களூரு மாணவி

பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய பெங்களூரு மாணவியை போலீசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
கடத்தல்
கடத்தல்
Published on

சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு மாணவி ஒருவர், காலில் செருப்பு இல்லாமல் மிகவும் பதற்றத்துடன் ஓடிவந்தார். போலீசார் அவரை சிறிதுநேரம் அமர வைத்து, தண்ணீர் கொடுத்தனர். அவரது பதற்றம் தணிந்தபிறகு அவரிடம் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர் விசாரித்தார்.

அதில் அவர், பெங்களூரு சஞ்சய் நகர் 2-வது ஸ்டேஜ் 16-வது தெருவைச் சேர்ந்த 18 வயது மாணவி என்பதும், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருவதும் தெரிந்தது.

மேலும் அவர் கூறியதாவது:-

எனது தந்தை பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். 7-ந்தேதி காலை நான் வீட்டில் இருந்தேன். அப்போது எங்கள் வீட்டுக்கு பால் பாக்கெட் கொண்டு வந்த ஒருவர், தனது நண்பருடன் சேர்ந்து எனது முகத்தில் மயக்க மருந்து தெளித்து, காரில் என்னை சென்னை கடத்தி வந்தனர்.

இங்கு மற்றொரு காரில் என்னை மாற்றியபோது அவர்களிடம் இருந்து நான் தப்பி வந்துவிட்டேன். என் தந்தையிடம் பணம் பறிக்கவே மர்மநபர்கள் என்னை பெங்களூருவில் இருந்து சென்னை கடத்தி வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அந்த மாணவியை போலீஸ் காரில் ஏற்றுக்கொண்டு கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து தப்பி எந்த வழியாக ஓடி வந்தாய்? என போலீசார் விசாரித்தனர். அதற்கு மாணவி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், பூக்கடை மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் அந்த மாணவி, பெங்களூருவில் இருந்து லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நடந்தே சிறிது தூரம் வந்து, அதன் பிறகு காலில் இருந்த செருப்பை கழற்றி வீசிவிட்டு அங்கிருந்து பதற்றமாக மூச்சுத்திணற போலீஸ் நிலையம் ஓடி வந்தது தெரிந்தது.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கடத்தல் நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டார்.

பூக்கடை அனைத்து மகளிர் போலீசார், மாணவிக்கு அறிவுரை கூறி எச்சரித்தனர். பின்னர் அவரது பெற்றோரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களுடன் மாணவியை அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com