பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று குண்டம் விழா: 2 லட்சம் பக்தர்கள் தீ மிதித்தனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்மிக்க கோவில் பண்ணாரி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று குண்டம் விழா: 2 லட்சம் பக்தர்கள் தீ மிதித்தனர்
Published on

விழாவில் தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த மாதம் 20-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று வீதி உலா வந்தார்.

சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், புதுவட வள்ளி, புது குய்யனூர், புது பீர்கடவு உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் சப்பரம் வீதி உலா சென்றது.

வீதி உலாவை முடித்துக் கொண்டு கடந்த 29-ந் தேதி நள்ளிரவில் அம்மன் சப்பரம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து கம்பம் சாட்டப்பட்டது. அன்று முதல் அம்மன் புகழ்பாடி மலை பகுதி மக்கள் கலை நிகழ்ச்சி நடத்தினர்.

நேற்று இரவு கோவில் முன் உள்ள குண்டத்தில் எரி கரும்புகள் எரியூட்டப்பட்டு குண்டம் வார்க்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு மங்கல வாத்தியங்களுடன் அம்மன் சப்பரம் கோவில் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளத்துக்கு சென்று அம்மன் அழைப்பு நடந்தது.

சரியாக 3.45 மணிக்கு அம்மன் சப்பரம் மற்றும் படை கலத்துடன் குண்டத்தை வந்தடைந்தது. 10 அடி நீளம் 4 அடி அகலத்தில் தயார் செய்யப்பட்ட குண்டத்தின் முன்பு பூ உருட்டப்பட்டு வரம் பெறுதல் நிகழ்ச்சி நடந்தது.


குண்டம் இறங்க காத்திருந்த பக்தர்கள்.

பிறகு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் பற்ற வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை 3.56 மணிக்கு பூசாரி ராஜேந்திரன் குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டியபடி முதலில் குண்டம் இறங்கினார்.

பிறகு கோவில் பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் குண்டம் இறங்கினர். இதைத்தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்தனர்.

ஆண்கள், பெண்கள், வய தானவர்கள், சிறியவர்கள் என அனைத்து தரப்பினரும் தீ மிதித்தனர். மேலும் போலீஸ் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், திருநங்கைகள் என பலரும் தீ மிதித்தனர்.

கர்நாடக மாநில பக்தர்களும் ஆயிரக்கணக்கான பேர் திரண்டு வந்து பயபக்தியுடன் அம்மனை வேண்டி குண்டம் இறங்கினர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே குண்டம் இறங்க காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்தனர். மேலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் காத்திருந்த பக்தர்கள் வரிசையாக வந்து தீ மிதித்த நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com