

சென்னையில் 3,200 மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 37 லட்சம் மாநகர, புறநகர் பயணிகள் இந்த பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 810 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் தினமும் 6.25 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
போக்குவரத்து கழகத்தின் சிக்கன நடவடிக்கையாக மாநகர், புறநகர் பஸ்களை கண்டக்டர்கள் இல்லாமல் இயக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சென்னை மாநகர் பஸ்களில் பஸ் நிறுத்தத்தை அறிவிக்க தானியங்கி ஒலி பெருக்கி வசதி, மற்றும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர பஸ்களில் விரைவில் தானியங்கி ஒலி பெருக்கி வசதி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பஸ் நிறுத்தங்கள் வரும்போது இந்த தானியங்கி ஒலி பெருக்கி தானாகவே அறிவிக்கும். ஜி.பி.எஸ். கருவி மூலம் இது செயல்படும் வகையில் அமைக்கப்படுகிறது. மின்சார ரெயில்களில் ஒவ்வொரு நிறுத்தங்கள் வரும்போது முன்கூட்டியே அறிவிப்புகள் வெளியாகும். அதுபோல மாநகர பஸ்களிலும் இந்த அறிவிப்புகள் வெளியாகும்.