அந்தியூரில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

அந்தியூரில் இன்று காலை காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூரில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். புதுப்பாளையத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குருநாதர் சாமி கோவில் திருவிழா நடந்து வருகிறது.

இந்த நிலையில் புதுப்பாளையம் பகுதியில் கடந்த 1 மாதமாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இது பற்றி பல மனுக்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அந்த பகுதி மக்கள் கூறினர்.

மேலும் திருவிழாவையொட்டி சரியாக குடிநீர் கிடைக்காததால் புதுப்பாளையம் பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திரண்டனர்.

புதுப்பாளையம்-பர்கூர் ரோட்டில் அவர்கள் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காலை நேரத்தில் பள்ளி வேன் மற்றும் வாகனங்கள் செல்வதால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியல் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரியும் போனில் தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com