

அந்தியூர்:
அந்தியூர் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி என்கிற முருகன் (வயது 55). சமையல் தொழிலாளி. இவர் இன்று காலை அந்தியூர் பெரியஏரி பகுதிக்கு சென்றார். ஏரி தண்ணீரில் கால் கழுவுவதற்காக இறங்கினார். அவருக்கு அடிக்கடிவலிப்பு நோய் ஏற்படுமாம். அது போன்று அவர் ஏரி தண்ணீரில் இறங்கியதும் வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் பெரியசாமி தண்ணீருக்குள் விழுந்தார்.
அருகில் மற்றொரு இடத்தில் ஏரி தண்ணீரில் பெரியசாமியின் தம்பி பழனிச்சாமி துணி துவைத்துக் கொண்டு இருந்தார். யாரோ தண்ணீருக்குள் விழுவதை அறிந்த பழனிச்சாமி சம்பவ இடத்துக்கு ஓடிவந்து பார்த்தார்.
அப்போது தண்ணீரில் விழுந்தது தனது அண்ணன் பெரியசாமி என்பதை அறிந்த பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்தார். அவர் தண்ணீரில் இறங்கி மீட்பதற்குள் பெரியசாமி ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெரியசாமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பலியான பெரியசாமிக்கு தேவகி என்ற மனைவியும், ஞானசேகர் (17), சந்தோஷ்குமார் (13) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். #tamilnews