அக்னி மாலையம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள்

பனவடலிசத்திரம் அருகே அக்னி மாலையம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவில் தொடர்ந்து 3 மணி நேரம் இரண்டு சிறுமிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
அக்னி மாலையம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள்
Published on

சங்கரன்கோவில் பனவடலிசத்திரம் அருகே உள்ள வடக்கு மாவிலியூத்து சென்பகவிநாயகர் அக்னி மாலையம்மன், நாகம்மன் கோவில் கொடை விழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான விழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நேற்று கோவில் கொடை விழா நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு அக்னி மாலையம்மனுக்கு குற்றாலத் தீர்த்தம் எடுத்து வருதல், பால்குடம், புனித தீர்த்தக் குடம் எடுத்தல், அம்மன் அலங்காரம், அம்மனுக்கு பால் அபிஷேகம், மஞ்சள் நீராட்டு, இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், எலுமிச்சை மாலை சாற்றுதல், சிறப்பு யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி விழா நடைபெற்றது.

இரவு கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் நெருப்பு குண்டம் அமைக்கப்பட்டு அக்னி வளர்க்கப்பட்டது. இதில் பக்தர்கள் பூக்குழியில் இறங்க தொடங்கினர். தொடர்ந்து 3 மணி நேரம் இரண்டு சிறுமிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கினர்.

இதனை தொடர்ந்து பக்தர்கள் அருள்வாக்கு கேட்டல், பொங்கலிடுதல், மாவிளக்கு எடுத்தல், பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துதல், கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com