

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாசஸ் உளவு விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி பதில் அளிக்கும் வரை அவைகளை நடத்த விடமாட்டோம் என உறுதியாக உள்ளன. அதேவேளையில் மோடி தலைமையிலான மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது.
இதனால் இரண்டு வாரத்திற்கு மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன. இன்றும் அவைகள் முடங்கின. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே மத்திய அரசு இன்று மூன்று மசோதாக்களை நிறைவேற்றியுள்ள நிலையில், மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்துள்ளன.
மத்திய அரசு இன்று மக்களவையில், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (திருத்தம்) மசோதா 2021, காப்பீடு, கடன் உத்தரவாதக் கழகம் (திருத்தம்) மசோதா 2021, அரசியலமைப்பு (பட்டியல் பழங்குடியினர்) ஆணை (திருத்தம்) மசோதா 2021 ஆகிய மூன்று சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
அவையில் கோரிக்கையை ஏற்காமல், கடும் அமளிக்கிடையில் மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது, ஜனநாயக கொலை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.