ஆபாசமாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட கேரள எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் மந்திரி பதவியா?

கேரள மாநிலத்தில் பெண் நிருபரிடம் போனில் ஆபாசமாக பேசியதால் மந்திரி பதவியை இழந்த சசீந்திரன் மீண்டும் மந்திரி சபையில் இணைக்கப்படுவார் என தெரிகிறது.
ஆபாசமாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட கேரள எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் மந்திரி பதவியா?
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இவரது மந்திரிசபையில் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்தவர் சசீந்திரன். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

இவர் தன்னிடம் டெலிபோனில் பேசிய ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசியது போன்ற குரல் பதிவை கேரளாவைச் சேர்ந்த ஒரு டெலிவி‌ஷன் செய்தியாக ஒளிபரப்பியது. இதனால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு பொறுப்பேற்று மந்திரி பதவியில் இருந்து சசீந்திரன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டமும் நடத்தின. இதனால் அவர், மந்திரி பதவியை இழந்தார். ஆனாலும் தான் குற்றமற்றவர் என்று அவர் கூறி இருந்தார்.

இந்த ஒளிபரப்பு தொடர்பாக அந்த டெலிவி‌ஷன் நிர்வாகி விளக்கம் அளிக்கும் போது, தங்கள் டெலிவி‌ஷன் பெண் நிருபரின் ரகசிய நடவடிக்கையின் மூலம் இந்த குரல் பதிவு கிடைத்ததாக கூறி இருந்தார். ஆனால் நாகரீகமற்ற முறையில் செய்தி ஒளிபரப்பியதாக டெலிவி‌ஷன் அதிகாரி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சசீந்திரன் மீது அந்த பெண் நிருபர் திருவனந்தபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு ஆஜரான அந்த பெண் நிருபர் திடீரென்று பல்டி அடித்தார்.

தான் செய்தியில் ஒளி பரப்பியபடி அந்த பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியது சசீந்திரன்தான் என்பது தனக்கு சரியாக தெரியவில்லை என்று கூறி விட்டார். இதை தொடர்ந்து இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த வழக்கில் இருந்து சசீந்திரன் எம்.எல்.ஏ.வை விடுவித்து உத்தரவிட்டார்.

கோர்ட்டு சசீந்திரன் எம்.எல்.ஏ.வை குற்றமற்றவர் என்று விடுவித்து உள்ளதால் அவர் மீண்டும் மந்திரியாக வாய்ப்பு உருவாகி உள்ளது.

இதுபற்றி சசீந்திரன் எம்.எல்.ஏ. கூறும்போது, இந்த குற்றச்சாட்டு எழுந்த போதே நான், தவறு செய்யவில்லை என்று கூறி இருந்தேன். அது தற்போது கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் நான் கூறியது உண்மை என்பதையும், நான் குற்றமற்றவன் என்பதையும் தற்போது பொதுமக்களும் தெரிந்து கொண்டு விட்டனர். எனவே நான், மீண்டும் மந்திரியாவேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com