

முன்னாள் மத்திய மந்திரியான அஜய் மக்கான் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்றார். டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், படுதோல்வியை சந்தித்ததையடுத்து, அஜய் மக்கானுக்கு இந்த பதவி வழங்கப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே அஜய் மக்கான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதையடுத்து பதவியை தொடர்ந்தார்.
மூன்று மாதங்களுக்கு முன்புகூட உடல்நலக்குறைவு காரணமாக அஜய் மக்கான் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை காங்கிரஸ் உடனடியாக மறுத்ததுடன், அவர் தற்காலிகமாக பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாக விளக்கம் அளித்தது.
இந்நிலையில், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அஜய் மக்கான் விலகியுள்ளார். நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த பின் ராஜினாமா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.