ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா “அரசியலில் பிரகாசிக்கப்போகிறவர் யார்?”- நடிகை நமீதா பேட்டி

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா ஆகிய 4 பேரில் அரசியலில் பிரகாசிக்கப்போகிறவர் யார்? என்ற கேள்விக்கு நடிகை நமீதா பதில் அளித்துள்ளார்.
நடிகை நமீதா
நடிகை நமீதா
Published on

‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் விஜயகாந்த் ஜோடியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமான குஜராத் குதிரை, நமீதா. அந்த படத்துக்குப்பின் ஏய், பச்சக்குதிர, பில்லா-2, அழகிய தமிழ் மகன் உள்பட பல படங்களில் நடித்து, தமிழ்நாட்டின் ‘கனவுக்கன்னி’களில் ஒருவர் ஆனார். திருமணத்துக்கு பின்னும் இங்கேயே தங்கி இருந்து ஏறக்குறைய தமிழச்சி ஆகிப்போனார். இப்போது அரசியல் மைதானத்திலும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

அவரிடம் ஒரு பேட்டி. நிருபரின் கேள்விகளும், அவற்றுக்கு நமீதாவின் பதில்களும் வருமாறு:-

கேள்வி:- திருமணத்துக்குப்பின் வாழ்க்கை எப்படியிருக்கிறது?

பதில்:- சந்தோசமாக இருக்கிறது. சினிமா, அரசியல் இரண்டிலும் ஈடுபாடுடன் இருக்கிறேன். நல்ல கணவர் அமைந்து இருக்கிறார். எனக்கு முழுமையான ஆதரவு தந்து கொண்டிருக்கிறார். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

கேள்வி:- சினிமா, அரசியல் இரண்டில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

பதில்:- இரண்டுக்கும் சரிசமமாக நேரம் ஒதுக்குகிறேன். ஒரு சராசரி பெண்ணாக இருந்த எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததை எண்ணி சந்தோசப்பட்டேன். சினிமா மூலம் எனக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறேன். அடுத்த கட்டமாக அரசியலில் ஈடுபட்டேன். அதற்கும் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். எனவே என் நேரத்தை சினிமாவுக்கும், அரசியலுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்கிறேன்.

கேள்வி:- சினிமா, அரசியல் இரண்டிலும் ஆதரவு கொடுக்கிறார்கள் என்கிறீர்கள். பதிலுக்கு நீங்கள் ரசிகர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன கொடுக்கப்போகிறீர்கள்?

பதில்:- விரைவில் ஒரு செய்தி வரும். அது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அதுபற்றி இப்போது சொல்லக்கூடாது. அதன் மூலம் ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி சொல்ல காத்திருக்கிறேன்.

கேள்வி:- ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா ஆகிய 4 பேரில் அரசியலில் பிரகாசிக்கப்போகிறவர் யார்?

பதில்:- (சிரித்தபடி): நான்கு பேருமே பலம் மிகுந்தவர்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இரண்டு கண்கள் மாதிரி. விஜய் மூளை மாதிரி. சூர்யா இதயம் மாதிரி.

கேள்வி:- வரப்போகிற தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா? அப்படி போட்டியிட்டால் உங்கள் சொந்த மாநிலத்திலா அல்லது தமிழ்நாட்டிலா?

பதில்:- நான் தமிழ்நாட்டுக்கு வந்து 16 வருடங்கள் ஆகிறது. சென்னை எனக்கு சொந்த ஊர் மாதிரி ஆகிவிட்டது. இங்கேதான் வீடு இருக்கிறது. இங்கேதான் வரி கட்டுகிறேன். என் பாஸ்போர்ட் முகவரியும் இங்கேதான் இருக்கிறது. அதனால், இங்கேதான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன்.

கேள்வி:-புதிய படங்களை தியேட்டரில் வெளியிடாமல், இணையதளத்தில் வெளியிடுகிறார்களே... அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- இனிமேல் அதுதான் வருங்காலம். கொரோனா சில நல்ல மாற்றங்களையும் தந்து இருக்கிறது.”

இவ்வாறு நமீதா கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com