திருவள்ளூர் அருகே டியூசன் ஆசிரியைக்கு கத்திக்குத்து - மாணவன் கைது

திருவள்ளூர் அருகே டியூசன் ஆசிரியையை கத்தியால் குத்திய 9-ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.
அம்பிகாதேவி
அம்பிகாதேவி
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு கணேஷ் நகரை சேர்ந்தவர் ஆனந்தசர்மா. இவரது மனைவி அம்பிகாதேவி (வயது 59). இவர்களுக்கு கிரிஷ், சாந்தினி என்ற மகனும், மகளும் உள்ளனர். கிரிஷ் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சாந்தினி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

அம்பிகாதேவி ஒரு ஆண்டுக்கு முன்னர் அப்பகுதியில் மாணவர்களுக்கு டியூசன் எடுத்தார். அவரிடம் திரளானவர்கள் டியூசனில் சேர்ந்து பயின்றுவந்தனர். உடல்நிலை சரியில்லாமல் போனதால் அம்பிகாதேவி ஒரு வருடமாக டியூசன் எடுக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு அம்பிகாதேவி வீட்டுக்கு வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த 14 வயதான 9-ம் வகுப்பு மாணவன் வந்தான்.

நான் ஏற்கனவே உங்களிடம் டியூசன் பயின்றுள்ளேன். எனவே எனக்கு மீண்டும் டியூசன் எடுக்க வேண்டும் என கூறினான். அதற்கு அம்பிகாதேவி தனக்கு உடல்நலம் சரியில்லாததால் டியூசன் எடுக்க முடியாது என கூறினார். இருப்பினும் தொடர்ந்து அந்த மாணவன் அம்பிகாதேவி வீட்டிற்கு சென்று தனக்கு டியூசன் எடுக்க வேண்டும் என வற்புறுத்தினான்.

அந்த மாணவன் நேற்றும் வீட்டுக்கு வந்து வற்புறுத்தியதால் அம்பிகாதேவி அவனுக்கு கணித பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்த அந்த மாணவன் தான் வைத்திருந்த கத்தியால் அம்பிகா தேவியின் நெற்றி, காது, தாடை ஆகிய பகுதிகளில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஆனந்தசர்மா மற்றும் உறவினர்கள் ஓடிவந்தனர். பலத்த காயமடைந்த அம்பிகாதேவியை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்து, இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com