விக்கிரவாண்டி அருகே 650 எவர்சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்- பறக்கும் படையினர் நடவடிக்கை

விக்கிரவாண்டி அருகே மினி லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 650 எவர்சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்து பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட எவர்சில்வர் பாத்திரங்கள்.
வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட எவர்சில்வர் பாத்திரங்கள்.
Published on

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 39 பறக்கும் படைகளும், நில கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை விக்கிரவாண்டி அடுத்த தென்னமாதேவி அருகே விழுப்புரம்-செஞ்சி சாலையில் நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த அதிகாரி, தனி தாசில்தார் ஆனந்தன் தலைமையில் போலீசார் முருகன், கதிர்வேல், ஜோசப் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக செஞ்சி நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் முறையான ஆவணங்களின்றி எவர் சில்வர் பாத்திரங்கள் ஏற்றி செல்வது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் வேனில் வந்த டிரைவர் தென்பேர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 30), அர்ச்சுணன் (58) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

ஆயுத பூஜையை முன்னிட்டு தென்பேரை சேர்ந்த சரவணன் என்பவர் தனது பால் சொசைட்டி உறுப்பினர்களுக்கு வழங்க எவர் சில்வர் பாத்திரங்களை எடுத்து செல்வதாக தெரிவித்தார்.

கண்காணிப்பு குழுவினர் மினி லாரியில் இருந்த 650 சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்தனர்.

விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தாசில்தார் பார்த்தீபனிடம் ஒப்படைத்தனர். வருவாய் உதவியாளர் தஸ்தகீர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பறிமுதல் செய்த பொருட்களை உதவி கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com