2 நாட்கள் நடந்த சோதனையில் ரெயிலில் ஓ.சி. பயணம் செய்த 389 பேர் சிக்கினர்

கடந்த 24 மற்றும் 25-ந் தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் நடத்திய சோதனையில் டிக்கெட் எடுக்காமல் ஓ.சி. பயணம் செய்த 389 பேர் சிக்கியதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
2 நாட்கள் நடந்த சோதனையில் ரெயிலில் ஓ.சி. பயணம் செய்த 389 பேர் சிக்கினர்
Published on

சென்னை:

சென்னை மண்டல ரெயில்வே கூடுதல் மேலாளர் கே.மனோஜ் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள் 25 பேர் தனித்தனி குழுக்களாக பிரிந்து கடந்த 24 மற்றும் 25-ந் தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் திடீர் சோதனையில் இறங்கினார்கள்.

சென்னை சென்டிரல்-அரக்கோணம், எழும்பூர்-விழுப்புரம் மார்க்கம் வரை இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் 5 மின்சார ரெயில்கள், 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நடத்தப்பட்ட சோதனையில், டிக்கெட் எடுக்காமல் ஓ.சி.யில் பயணம் செய்த 120 பேர் சிக்கினர். இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து முதல் வகுப்பில் பயணித்தல் உள்பட முறைதவறிய பயணம் செய்த 64 பேரும் பிடிபட்டனர். இதுதொடர்பாக மொத்தம் 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.73 ஆயிரத்து 80 அபராதம் வசூலிக்கப்பட்டது.

எழும்பூர்-விழுப்புரம் மார்க்கத்தில் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், ஒரு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு மின்சார ரெயிலில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் டிக்கெட் இல்லாமல் ஓ.சி.யில் பயணம் செய்த 269 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.79 ஆயிரத்து 870 அபராதம் பெறப்பட்டது.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com